ஸ்ரீவில்லிபுத்துார்:சமய நெறிகளில் யாரும் அனுமதியளிக்க வேண்டியதில்லை. தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசத்தை கண்டிப்பாக நடத்தியே தீருவோம், என, ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:ஆதீனங்கள், மடாதிபதிகள், கோவில்கள் விஷயங்களில் யாரும் உள்ளே நுழைந்து, இதைச் செய்யக்கூடாது; அதைச் செய்யக்கூடாது எனக்கூற அதிகாரம் இல்லை. தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் செய்ய தடை விதித்திருப்பது, மன வேதனை அளிக்கிறது. தொன்று தொட்டு நடைபெறும் பட்டினப்பிரவேசம் இது. சிஷ்யர்கள் தங்கள் குருவை கொண்டாடும் உத்சவம் இது.எனவே, அந்த நிகழ்ச்சியை நாங்கள் கண்டிப்பாக நடத்தியே தீருவோம். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளோம். பட்டினப்பிரவேசம் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும்.தமிழக அரசு மிகவும் நல்ல விதமாக செயல்படுகிறது. ஆனால், ஆன்மிகத்தில் தேவையில்லாத சில விஷயங்கள் நடப்பது, அரசிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.முதல்வருடன் இருக்கும் சில கரும்புள்ளிகளால் அவரது அரசுக்கு, ஹிந்துக்களுக்கு எதிரான அரசு என்ற கெட்ட பெயர் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.