பதிவு செய்த நாள்
07
மே
2022
05:05
சென்னை:அறநிலையத் துறை அலுவலர்களுக்கு, வாக்கி டாக்கி வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.பின், அவர் அளித்த பேட்டி: அறநிலையத் துறையில், 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட, நான்கு கோடி ஆவணங்கள், ஸ்கேன் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளன. முதுநிலை கோவில்கள், சிசிடிவி கேமரா வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.சட்டசபை மானியக் கோரிக்கை தவிர்த்து, கிராமப்புற திருப்பணி திட்டத்தின் கீழ், 8,934 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இப்பணிகளை கண்காணிக்க முதற்கட்டமாக தலைமையிட அலுவலர்கள், இணை கமிஷனர்கள் உள்ளிட்டோருக்கு, 100 வாக்கி டாக்கி தொலைதொடர்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, உதவிக் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் வட்டாட்சியர், கோவில் பணியாளர், பாதுகாப்பு அலுவலர், செயல் அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளன. திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலில், பக்தர்களிடம்அர்ச்சகர்கள் பணம் பெற்று,தரிசனம் செய்ய அனுமதிப்பதாக வரும் புகார்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்பிரியா, இணை ஆணையர்கள் சுதர்சன், தனபால், ஜெயராமன், லட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர்.