பதிவு செய்த நாள்
07
மே
2022
05:05
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (8ம் தேதி) நடைபெறுவதையொட்டி பக்தர்கள் தீர்த்தம் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.வால்பாறை நகரில் அமைந்துள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலின் மகாகும்பாபிஷேக விழா நாளை (8ம் தேதி) நடக்கிறது. விழாவில், நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து பகல், 1:00 மணிக்கு ராமேஸ்வரம், சபரிமலை உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தை காமாட்சி அம்மன் கோவிலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்றனர். மாலை, 4:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு முதல் கால யாக பூஜை நடந்தது.விழாவில் நாளை காலை, 8:15 மணிக்கு, விநாயகர், முருகன், காசிவிஸ்வநாதர், ஐயப்பன், நவக்கிரகம், காலபைரவர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு, தனித்தனியாக மகாகும்பாபிஷேக விழா நடக்கிறது.தொடர்ந்து, முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்காரபூஜையும் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வரும், 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.