குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2022 10:05
மயிலாடுதுறை : குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. ஆதீனங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான பரிமள சுகந்த நாயகி உடனாய உக்தவேதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருத்துருத்தி என்று அழைக்கப்படும் இக்கோவிலில் சுவாமி மணவாள நாதர் திருக்கோலத்துடன் அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் பார்வதிதேவியை மணம் முடிக்க சிவபெருமான் கைலாயத்தில் இருந்து வந்த போது அவருக்கு துணையாக வந்த உத்தால மரமும், சிவபெருமானின் பாதரட்ஷையும் இன்றும் இக்கோயிலில் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து இன்று காலை 8ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றது. அதனையடுத்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வளம் வந்து விமான கலசத்தை அடைந்தன. தொடர்ந்து தருமபுரம் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதினம் 233 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் சுவாமி சன்னதி விமானக் கலசத்திற்கு திருக்கடையூர் மகேஷ் குருக்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து ஏககாலத்தில் சுவாமி, நடராஜர், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து சுவாமி, அம்பாள், நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சென்னை மகாலட்சுமி உள்ள்ட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி மயிலாடுதுறை டிஎஸ்பி. வசந்த ராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.