பதிவு செய்த நாள்
08
மே
2022
10:05
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள எம்பெருமானார் தர்சன ஐக்கிய சபா சார்பில் ராமானுஜரின், 1005ம் திருநட்சத்திர திருவிழா நடந்தது.
குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள ராமானுஜர் கூடத்தில் ராமானுஜர் திருநட்சத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடந்த நிகழ்ச்சியில், நாள்தோறும் ராமானுஜர் மங்களகிரி வாகனம், சூரிய பிரபை, சந்திரப் பிரபை, முத்துப் பந்தல் அலங்காரம், சேஷ வாகனம், பல்லக்கு சேவை, அலங்கார பல்லக்கு, சர்வ பூபால வாகனம், ஆச்சாரியா விமானம் ஆகியவற்றில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி சின்ன மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பாலமலை, இடிகரை, நாயக்கன்பாளையம், கூடலூர், கவுண்டம்பாளையம், நாயக்கனூர், திருமலைநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கோஷ்டியினரின் பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.