சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே காப்பாரப்பட்டி அய்யனார் கோயிலுக்கு புரவி ஊர்வலம் சென்றது. இக்கிராமத்தில் உள்ள காப்பார ஐயனார், கரடி கருப்பர் கோயில் புரவி எடுப்பு திருவிழா துவங்கியது. இதையொட்டி 15 நாட்களுக்கு முன்பு சிங்கம்புணரி குலாலர் தெருவில் உள்ள பஜனை மடம் முன்பாக புரவி, கரடிகள், கருப்பசுவாமி சிலை செய்யப்பட்டது. இன்று புரவி ஊர்வலம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு நான்கு புரவிகள், மூன்று கரடிகள் ஒரு கருப்பர் சிலை என ஊர்வலமாக புறப்பட்டது. சந்திவீரன் கூடம் முன்பாக சாமியாடிகள் அரிவாளில் ஏறி நின்று அருள்வாக்கு கூறினர். இரவு 7:00 மணிக்கு காப்பாரப்பட்டி திடலுக்கு சென்றடைந்தது. நாளை மாலை திடலில் இருந்து கோயிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.