பத்ரிநாத் கோவில் திறப்பு: சார்தாம் புனித யாத்திரை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2022 08:05
பத்ரிநாத்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து, சார்தாம் புனித யாத்திரை துவங்கியது.
உத்தரகண்ட் மாநிலம் இமயமலை தொடரில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. குளிர் மற்றும் மழைக் காலங்களில் ஆறு மாதங்களுக்கு இந்த தலங்கள் மூடப்பட்டு இருக்கும். கோடை காலத்தில் திறக்கப்படும். இந்த நான்கு தலங்களுக்கும் செல்வது சார்தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது. கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி, கேதார்நாத் கோவில்கள் சமீபத்தில் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, பத்ரிநாத் கோவில் நேற்று அதிகாலை 6:15 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர்.நான்கு தலங்களும் திறக்கப்பட்டதையடுத்து, சார்தாம் யாத்திரை நேற்று துவங்கியது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்வர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டு களில் சார்தாம் யாத்திரை நடக்கவில்லை. இரண்டு ஆண்டுக்குப் பின் யாத்திரை துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.