திருச்சூர் பூரம் திருவிழா : கண்களுக்கு விருந்தளித்த யானை சமயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2022 08:05
பாலக்காடு: பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்குகிறது. கேரளா திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பும் குடை மாற்றவும் வான வேடிக்கையும் மிகவும் பிரபலமானது.
இன்று காலை நெய்தலைக்காவு பகவதி அம்மன் உருவச்சிலையை ஏந்தி, திருச்சூர் பூரம் விழாவில், எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை வடக்குநாதர் கோவிலின் மேற்கு நடை வழியாக கோவிலுக்குள் வந்து தெற்கு கோபுர நடை வழியாக வெளியே வந்து மூன்று முறை தும்பிக்கையை உயர்த்தி திருச்சூர் பூரம் திருவிழா துவங்குவதாக அறிவிப்பதுடன் மூன்று நாள் கொண்ட திருவிழாவிற்கு ஆரம்பமாகும். திருவிழாவின் சிறப்பு அம்சமான யானைகளின் அணிவகுப்பும் குடை மாற்றவும் திருவிழாவின் முக்கிய நாளான நாளை (10ம் தேதி) மாலை நடைபெறும். அதை தொடர்ந்து பிரம்மாண்ட வான வேடிக்கையும் நடைபெறும். முன்னதாக விழாவையொட்டி பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் போட்டிபோட்டு நடத்தும் யானைகளின் ஆடை ஆபரண அலங்காரப் பொருட்களின் கண்காட்சியான "யானை சமயம்" நேற்று துவங்கியது. இது இன்று நிறைவுபெறும். இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.