பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை நீக்கம் : மயிலாடுதுறை ஆர்டிஓ. அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2022 12:05
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன பட்டிணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை ஆர்டிஓ. அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிபி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதம் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டின பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் ஆதீன குருமகா சன்னிதானம் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா செல்வது வழக்கம். இந்நிகழ்ச்சி வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டினப்பிரவேசம் பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி மயிலாடுதுறை ஆர்டிஓ. பாலாஜி தடை விதித்து உத்தரவிட்டார். இதனால் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டதுடன், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அரசு மற்றும் தருமபுரம் ஆதீனம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு தருமபுரம் ஆதீன 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம், செங்கோல் ஆதீனம் குருமகாசன்னிதானம், தொண்டை மண்டல ஆதீன குருமகா சந்நிதானம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் பட்டினப்பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சிக்கு விதித்த தடை நீக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக உள்ளதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் மயிலாடுதுறை ஆர்டிஓ பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தருமபுர ஆதீனத்தில் இருந்து தடையை விலக்கிக்கொள்ள கோரிய மனுவை ஏற்று பட்டினப்பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதித்த ஆணையை விலக்கிக் கொள்வதாக மயிலாடுதுறை ஆர்டிஓ. பாலாஜி உத்தரவிட்டு, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.