ஆலந்துறை: பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், ஸ்ரீ மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம் முற்றோதுதல் திருவிழா நடந்தது.
திருவாசகம் முற்றோதுதல் கட்டளை சார்பில், ஸ்ரீ மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம் முற்றோதுதல் திருவிழா பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் நடந்தது. இரண்டு நாள் நிகழ்ச்சியில், முதல் நாளான நேற்றுமுன்தினம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து, 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியை, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் துவக்கி வைத்தார். இரண்டாம் நாளான நேற்று, ஸ்ரீ மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், சதாசிவ பரபிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் திருக்கழுக்குன்றம் தாமோதரன் சுவாமிகள் கலந்துகொண்டு, திருவாசகத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார் பக்தர்கள் கலந்து கொண்டனர்.