பதிவு செய்த நாள்
10
மே
2022
09:05
அவிநாசி: ஓம் நமச்சிவாய கோஷம் முழங்க, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம், வரும் 12 முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. 63 நாயன்மார்கள் வழிபாட்டு குழு அறக்கட்டளை சார்பில், 2016ல் ஸ்ரீ சுப்பிரமணியர் செய்து. கோவிலுக்கு தேர் ஒப்படைக்கப்பட்டது. கடந்த, 2016ல் சண்டிகேஸ்வரர் பெருமானுக்கு தேர் செய்யும் பணிகள் துவங்கியது. தல புராணம், நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய அழகிய தேர் செய்யும் பணி, 2019ல் முடிவடைந்தது. இத்தேரின் உயரம் 18 அடி. 4.25 டன் எடை உடையதாக தேரின் கீழ் சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர் நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. நேற்று மாலை, 4:00 மணிக்கு கோவிலில், விக்னேஸ்வர பூஜை, தொடர்ந்து, புன்மா யாகம், பஞ்சகவ்ய பூஜை நடத்தப்பட்டன. மாலை, 5:00 மணிக்கு தேர் நிலையில் இருந்து, திருத்தேர் வெள்ளோட்டம் புறப்பட்டது. ஹிந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் நடராஜ், தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். கோவில் செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து, ரத வீதியில் இழுத்துச் சென்றனர். மங்கள வாத்தியம் முழங்க, ஓம் நமசிவாய, முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் தேரை இழுத்து சென்று நிலை சேர்த்தனர். இதற்கான ஏற்பாடுகளை, 63 பஞ்சமூர்த்திகள் நாயன்மார்கள் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.