சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இணைய வழி வாடகை வசூல் மையங்கள் வாயிலாக 175 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதுகுறித்த அவரது அறிக்கை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வாடகைதாரர்கள் இணைய வழி வாயிலாக வாடகை செலுத்தும் வகையில் வசூல் மையங்கள் திறக்கப்பட்டு ரசீது வழங்கும் முறை அக்டோபரில் அமலுக்கு வந்தது. கோவில்களின் அசையா சொத்துக்களுக்கு ஜூலை முதல் ஜூன் வரையிலான பசலி ஆண்டு முறையில் வாடகை குத்தகை கணக்கிட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பசலி ஆண்டு ஜூன் 30ல் முடிகிறது. இதுவரை 175 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை - 1 இணை கமிஷனர் அலுவலகம் வாயிலாக 26.60 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. குறைந்தபட்சமாக விழுப்புரம் இணை கமிஷனர் அலுலகம் வாயிலாக 1.61 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகள் மற்றும் கோவில்களின் வாடகை குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக கோவில்களின் திருப்பணிகள் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயனுள்ளதாக அமையும்.எனவே கோயில்கள் இடத்தில் குடியிருப்பவர்கள் குத்தகைதாரர்கள் வாடகை நிலுவை தொகையை செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.இவ்வாறு சேகர்பாபு தெரிவித்துள்ளார்.