பதிவு செய்த நாள்
17
மே
2022
05:05
திருச்சுழி: விருதுநகர் மாவட்டத்தில், முதல்முறையாக முற்கால பாண்டியர் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருச்சுழி அருகே இலுப்பையூரில், வரலாற்றுத் துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில், வரலாற்றுத்துறை மாணவர்களான ராஜபாண்டி, சரத்ராம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கிபி 9, 10 ம், நூற்றாண்டைச் சேர்ந்த, முற்கால பாண்டியர்களின் நடுகல்லை கண்டறிந்தனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, " இந்த கல்லானது 6 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டது. கல்லின் மேல் பகுதியில் 11 வரிகள் கொண்ட, வட்டெழுத்து கல்வெட்டாக காணப்படுகிறது. ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குனரும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலருமான சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பட்டது. இந்த கல்வெட்டில் இடது பாதி முற்றிலும் சிதைந்து, வலது பாதியில் மட்டும் எழுத்துக்கள் காணப்படுகிறது. இரண்டு ஊர்களுக்கு இடையே ஏற்பட்ட பூசலில், புல்லன் சாத்தன் என்ற வீரர் ஒரு ஊரை வென்று, போரில் உயிர் நீத்தார், என்பதை கூறுகிறது. இதுவரையில், பாண்டியநாட்டில் கிபி 10 ம், நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து நடுகற்கள் 2 மட்டுமே, கிடைத்துள்ளன. அதில் ஒன்று தற்போது கண்டறியப்பட்ட இலுப்பையூர் கல்வெட்டாகும். மற்றொன்று, இதே ஊருக்கு தெற்கில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் நீராவிக்கு, அருகிலுள்ள கரிசல்குளம் என்னும் கிராமத்தில் உள்ள நடுகல் கண்டறியப்பட்டது. இந்த நடுகல் பசுக் கூட்டங்களைக் கவர்ந்து சென்றபோது, எதிர்த்து போரிட்டு, உயிர் நீத்த வீரனுக்கு நடப்பட்ட நடுகல் ஆகும். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில் ராஜபாளையம் அருகில், முதுகுடியில், பிற்கால பாண்டியரின் நடுக்கல்லானது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த மாவட்டத்தில், எங்களது களப்பணியின் வாயிலாக, முதன்முறையாக, முற்காலப் பாண்டியர்களின் நடுக்கப் கண்டறியப்பட்டுள்ளது.