பதிவு செய்த நாள்
18
மே
2022
04:05
புதுடில்லி: அமர்நாத் புனித யாத்திரை தொடர்பான பாதுகாப்பு மற்றும் பயண நடைமுறைகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு செய்தார்.
ஜம்மு - காஷ்மீரின் அமர்நாத்தில் உள்ள குகைக் கோவிலில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் யாத்ரீகர்கள் வருகை தருவர்.
ஆலோசனை : இந்த ஆண்டுக்கான யாத்திரை, ஜூன் 30ல் துவங்கி, ஆக., 11 வரை நடக்க உள்ளது.கடல் மட்டத்தில் இருந்து, 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த குகை கோவிலுக்கு மேற்கொள்ளப்பட உள்ள யாத்திரை தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த யாத்திரை நடக்கவில்லை. 2019ல், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது.இந்த ஆண்டு, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் யாத்திரை மேற்கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில், சமீபத்தில் முஸ்லிம் அல்லாதோர் மீதான தாக்குதல்கள் நடந்துள்ளன. காஷ்மீரி பண்டிட்டான அரசு அதிகாரி, அவரது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதையடுத்து, அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு மற்றும் பயண நடைமுறை ஏற்பாடுகள் குறித்து, அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
ட்ரோன் : ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே, ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., தில்பக் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.பயண நடைமுறை தொடர்பாக அமித் ஷா நடத்திய ஆய்வு கூட்டத்தில் சுகாதாரம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். கடந்த ஆண்டுகளில், பயணத்தை கண்காணிக்கும் வகையில், வாகனங்களுக்கு ரேடியோ அலைக்கற்றை அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்தாண்டு, ஒவ்வொரு யாத்ரீகருக்கும் அதுபோன்ற அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.பாதுகாப்பு பணியில், ஜம்மு - காஷ்மீர் போலீசாருடன், 12 ஆயிரம் துணை ராணுவப் படையினரும் ஈடுபட உள்ளனர். ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் மூலம் கண்காணிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.