பதிவு செய்த நாள்
18
மே
2022
05:05
மேட்டுப்பாளையம்: காமராஜ் நகரில் உள்ள, மகா முத்துமாரியம்மன் கோவிலில், குண்டம் விழா நடந்தது.
மேட்டுப்பாளையம் காட்டூர் அருகே, காமராஜ் நகரில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் விழா கடந்த, 3ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 10ம் தேதி கம்பம் நடுதலும், 15ல் பூச்சட்டி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை பவானி ஆற்றில் இருந்து, தாரை, தப்பட்டை, பம்பை, உடுக்கை முழங்க, கோவிலுக்கு அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். காலை, 8:15 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. கோவில் பூசாரி வேலவன், குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தார். பின்பு, குண்டத்தில் பூ பந்தை உருட்டி விட்டு, முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து பூசாரி மகேந்திரன் மற்றும் நீண்ட வரிசையில் காத்திருந்த சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை செய்தனர். மதியம் அம்மனுக்கு, பெண்கள் மாவிளக்கு படைத்து வழிபட்டனர். நிகழ்ச்சி நடை உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.