பதிவு செய்த நாள்
23
மே
2022
08:05
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன பட்டனப்பிரவேச விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து குருவருளை பெற்றனர்.
மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா கருத்தங்கம், சமயப்பயிற்சி வகுப்பு, திருநெறிய தெய்வத்தமிழ்மாநாடு, ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா என்று 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 10ம் திருநாள் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருமூர்ததியான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழாவும், 11ம் திருநாள் குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவில் பட்டினபிரவேசமும் நடைபெறும். அப்போது குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கிசென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளை சுற்றி வரும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த மாதம் பல்லக்குதூக்கும் (பட்டினப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை ஆர்.டி.ஓ.பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் பல்லக்குதூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக கடந்த 7ம் தேதி ஆர்டிஓ. பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி பிரபலமானதால் கடந்த காலங்களை விட இந்த ஆண்டு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதாலும், சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஏதாவது பிரச்னை ஏற்படாமல் பாதுகாப்பு அளிப்பதற்கு டிஐஜி கயல்விழி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 11ம் திருநாளான நேற்று காலை குருஞானசம்பந்தர் குருபூஜை திருநாளையொட்டி திருமடத்தில் சிவபூஜை, சொக்கநாதர்பூஜை, குருஞானசம்பந்தர் திருவுருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை தருமை ஆதீனம் 27வது குருமுகா சன்னதானம் செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர், தூர்க்கை அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். மதியம் மாகேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை மேலகுருமூர்த்தத்தில் குருமகா சன்னிதானம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இரவு தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபாரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் படைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.
தருமபுரம் ஆதீன திருமடத்தின் நான்கு வீதிகளிலும் பூர்ணகும்ப மரியாதையுடன் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கினார். தொடர்ந்து குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை கண்டு தரிசித்து குரு அருளைப் பெற்றனர். மதுரை ஆதீனம் 293வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்திய ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் 28வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் துலாவூர் ஆதீனம் நிரம்ப அழகிய தேசிகர் வேளாக்குறிச்சி ஆதீனம் இளைய குருமகாசந்நிதானம் ஸ்ரீ அஜபா நடேஸ்வர சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்.ராஜா மாநில துணைத் தலைவர் முருகானந்தம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பட்டின பிரவேசம் கழிச்சி தரிசித்து குருவருளை பெற்றனர். முன்னதாக ஆதீன குருபூஜை, பட்டின பிரவேசம் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க 27 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தையும், பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தலா ஒரு தேக்கு ஒரு செம்மர கன்று வழங்கும் திட்டத்தையும் தருமை ஆதீன குருமகா சன்னிதானம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தனது திருக்கரத்தால் ஆதின நந்தவனத்தில் பலர் கண்டு ஒன்றை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை முன்னிட்டு மங்கல இசை, பல்வேறு வகையான நாட்டியங்கள், வேல்முருகனின் இசைக்கச்சேரி உள்ளிட்டவை நடைபெற்றன.