உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வடக்கு தெரு வராகி அம்மன் கோவிலில், மாயமான வெண்கல உற்சவர் அம்மன் சிலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை வடக்குத்தெரு வராகி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மூலஸ்தானம் அருகே பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 7 அங்குலம் அளவு உற்சவர் அம்மன் வெண்கல சிலையை 2019ல் ராமேஸ்வரம் பக்தர் ரகு காணிக்கையாக வழங்கினார்.இக்கோவிலில் நான்கு பங்காளிகள் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு அர்ச்சகர்கள் பணிபுரிகின்றனர். ஒரு மாதத்திற்கு முன், அருண்குமார் என்பவர் பூஜை செய்த காலத்தில் சிலையை காணவில்லை என புகார் எழுந்தது. பழைய சிலைக்கு மாற்றாக அதே இடத்தில் அதே அளவுள்ள வேறு சிலை இருப்பதும் கண்டறியப்பட்டது.இது குறித்து, ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், போலீசில் புகார் செய்தார். மாயமான சிலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.