சூலூர்: காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
சூலூர் அடுத்த காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, விமானம் மற்றும் மண்டபத்துக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. நேற்று முன் தினம் காலை, கணபதி மற்றும் நவக்கிரஹ ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை, தீர்த்தக் குடம், முளைப்பாரிகை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், புனித நீர் கலசங்களை நிறுவி முதல் கால ஹோமம் பூர்ணாகுதி நடந்தது. நேற்று இரு கால ஹோமங்கள் நடந்தன. இன்று அதிகாலை நான்காம் கால ஹோமம் முடிந்து, 7:15 மணிக்கு, சென்னியாண்டவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தச தானம், தச தரிசனம் முடிந்து மகா தீபாராதனை நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.