நாகர்கோவில்: சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதியில் வைகாசி திருவிழா காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு முந்திரி பதமிடுதல், 5:00 மணிக்கு சிறப்பு பணிவிடையை தொடர்ந்து 6:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பகல் 12:00 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம், இரவு 7:00 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து விழா 11 நாட்கள் நடக்கிறது. ஜூன் மூன்றாம் தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முந்திரி கிணற்றின்கரையில் கலிவேட்டை நடத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆறாம் தேதி பகல் 12:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. எல்லா நாட்களிலும் மூன்று வேளை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.