பென்னாகரம் அடுத்த பவளந்துார் கரக முத்துமாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நேற்று, நடந்தது. பென்னாகரம் அருகே வட்டுவனஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பவளந்துாரில், ஆயிரமாண்டுகள் பழமையான கரக முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் திருவிழா நடக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று, பவளந்துாரில் அமைந்துள்ள கங்கையில் இருந்து சுமார், 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாளங்களுடன் சக்தி கரகம் அழைத்தும், அலகு குத்தியும், பூ கரகம் எடுத்தும் வந்தனர். பின், கரக முத்துமாரியம்மன் கோவில் முன் அமைத்திருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், கிராம பெண்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.