பதிவு செய்த நாள்
27
மே
2022
06:05
தொண்டாமுத்தூர்: சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், வளமான மண் தான், நம்முடைய வளமான வாழ்க்கையின் ஆதாரம். ஆரோக்கியமான மண்ணும், ஆரோக்கியமான வாழ்வும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசினார்.
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில், உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில், நகரங்களின் எதிர்காலம் என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், 150க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துகொண்டார். இதில் ஈக்வடார் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் ஹெலனா கவுலிங்கா, இந்திய அமெரிக்க எழுத்தாளர் தீபக் சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசுகையில்,"உலகின் நீண்ட கால நல்வாழ்வு, உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்வதை குறைப்பது, விவசாயிகள் தங்கள் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்வது போன்றவற்றிற்கு, மண்வளத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். வளம் இழந்த நிலங்களை மீட்டெடுக்க, ஒரு கட்டட நகரம் உருவாக்கலாம். நகரங்களில் மக்களின் நெரிசலை குறைக்கும் விதமாக, நகரங்களுக்கு வெளியே அதிக நிலம் இருக்கும் இடங்களில், கட்டடங்கள் கட்டுவதை கட்டுமானத் துறையினர் பரிசீலிக்க வேண்டும். உதாரணத்திற்கு, 50 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கரில் மட்டும், 50 முதல் 100 மாடி கட்டடங்களை கட்டலாம். மீதமுள்ள, 49 ஏக்கரில், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக காடு உருவாக்கலாம். நீங்கள் விரும்பினால், உங்களுக்கு தேவையான பழங்கள் மற்றும் காய்கறிகளையும் அங்கு சாகுபடி செய்து கொள்ளலாம்.
உலகில், 72 சதவீத பொருளாதார முதலீடுகள், வெறும், 31 நகரங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால், அந்த பெருநகரங்கள், பிற மாவட்டங்களில் இருந்து மக்களை இடம் பெயர செய்யும் காந்தமாக செயல்படுவதோடு மட்டுமின்றி, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் புத்திசாலித்தனம் அற்றதாகவும் மாறுகிறது. இதற்கு பதிலாக, முதலீடுகளை அனைத்து இடங்களிலும் பரவலாக்க வேண்டும். மக்கள் அதிகம் வசிக்கும் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்,"என்றார்.