பதிவு செய்த நாள்
28
மே
2022
04:05
கீழ்ப்பாக்கம்,-ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று ஆய்வு செய்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியை நேற்று, துறையின் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், 10 கல்லுாரிகள், 27 பள்ளிகள் செயல்படுகின்றன.
இப்பள்ளியில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன். தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அடுத்த கல்வியாண்டில், இப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும்.ஓராண்டில், 186 கோவில்களில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடந்துள்ளது. மேலும், 2021- ௨௦-22ம் ஆண்டில் 662 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் நடந்து வருகின்றன.தவிர, 1,250 கிராமப்புற கோவில் மற்றும் ஆதிதிராவிடர் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள கோவில்களில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. கடந்த மூன்று மாதத்தில், கோவில் நிலங்களில், 186 கோடி ரூபாய் நிலுவை வாடகை தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.