குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் சேதமடைந்ததால் பக்தர்கள் அச்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2022 02:05
மயிலாடுதுறை: குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் உடைந்து தொங்குவதால் அச்சமடைந்துள்ள பக்தர்கள் உடனடியாக அதனை சீர்செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் சவுந்தரநாயகி அம்பாள் உடனாகிய சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகியோர் தங்கி சென்றதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் சிவபெருமானை சூரியன், சந்திரன் சனி பகவான் மற்றும் நலன் மகாராஜா ஆகியோர் பூஜித்து சாபவிமோசனம் பெற்றுள்ளனர். இத்தலம் சனிபகவான் சாப தோஷ நிவர்த்தி தலமாக விளங்கி வருகிறது. இங்கு சனீஸ்வர பகவான் நின்ற கோலத்தில், கைகூப்பியபடி அமிர்தத்தை கையில் ஏந்தியவாறு பொங்கு சனீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இத்தலத்தில் நவகிரகங்கள் இல்லாததால், கொடிமரம் இல்லாமல் இருந்துள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்போது புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிந்து 14 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான பாலஸ்தாபனம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் திருப்பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கோவிலில் உள்ள செப்புக் கவசமிட்ட கொடி மரத்தின் நடு பாகம் கடந்த ஆண்டு சேதமடைந்துள்ளது. அதனை சரி செய்யாத இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கொடிமரத்திற்கு சாரம் அமைத்து கொடிமரம் கீழே சாயாது நிறுத்தியுள்ளனர். கோவில் கொடி மரம் சேதம் அடைவது மக்களுக்கு ஆகாது என்பதால் உடனடியாக சேதமடைந்த கொடிமரத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய கொடிமரம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எதற்கும் இந்து சமய அறநிலையத் துறையினர் செவிமடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கொடிமரத்தின் மேல் உள்ள கோடி சேதமடைந்து உடைந்து துவங்கியுள்ளது. இதனை கண்டு மேலும் அச்சம் அடைந்த கிராம மக்கள் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். கொடிமரத்தை புதிதாக செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிவன் கோவில் கொடிமரம் சேதமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.