பழநி: பழநி மலைக்கோயிலில் போகர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. பழநி மலைக்கோயிலில் போகர் சித்தர் ஜீவ சாமதி சன்னதி உள்ளது. இங்கு போகர் சித்தர் வழிபட்ட மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மன் ஆகியவை உள்ளன. நாள்தோறும் இங்கு பூஜைகள் நடை பெற்று வருகின்றன.
வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தை முன்னிட்டு போகர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. போகர் சந்நிதியில் புவனேஸ்வரி அம்மன், மரகத லிங்கம் ஆகியவற்றிற்கு பழங்கள் கங்கைநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பின் சார்பில் போகர் திருவுருவப்படத்துடன் கிரிவலம் வந்து போகர் ஜெயந்தி விழாவை கொண்டாடினர். போகர் சித்தாந்த சபை யின் சார்பாக தனியார் மண்டபத்தில் போகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இங்கே பரதநாட்டியம் உள்ளிட்ட பல வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.