பதிவு செய்த நாள்
29
மே
2022
03:05
சிதம்பரம் : சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் வைகாசி விழா கடந்த 20ம் தேதி விநாயகர் வழிபாடு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது.21ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தினசரி, விநாயகர் மற்றும் தில்லை காளியம்மனுக்குசிறப்பு அபிேஷக ஆராதனை,இரவில் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதகி வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், கைலாய வாகனம், ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வந்த அம்மன், மதியம் 2:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.வடக்கு வீதி ஆர்ச் அருகில் துவங்கி,கிழக்கு ரத வீதி, தெற்கு வீதி, மேற்கு வீதி வழியாக வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. திராளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இன்று 29 ம் தேதி தீர்த்தவாரி, இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. நாளை 30ம் தேதி முத்து பல்லக்கில் ஊர்வலம், 31ம் தேதி தெப்ப உற்சவம், 1ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் ரம்யா, இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் சந்திரசேகர், ஆய்வாளர் நரசிங்கபெருமாள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.