சூலூர்: அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் வாசுதேவன் குட்டை உள்ளது. இதன் அருகில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில், பல ஆண்டுகள் பழமை வாய்ந்த வருண பகவான் மற்றும் வாசுதேவன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இக்கோவில்கள் அருகில் மேலும் சில கோவில்களை ஒரு தரப்பினர் கட்டி வந்தனர். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மணி என்ற விவசாயி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும், ஏழு கோவில் கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து கடந்தாண்டு மூன்று கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று மீதமுள்ள நான்கு கோவில் கட்டடங்களை, போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்து அகற்றினர்.