பதிவு செய்த நாள்
01
ஜூன்
2022
08:06
சென்னை : வடபழநி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாகப் பிரம்மோற்சவம், 3ம் தேதி கொடியேற்றதுடன் துவங்குகிறது.
அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள வடபழநி ஆண்டவர் கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவமும், விடையாற்றி பெருவிழாவும் விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகப் பெருவிழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனை முன்னிட்டு, நாளை மாலை, வரசித்தி விநாயகர் திருவீதி உலா நடக்கிறது. வரும், 3ம் தேதி காலை, 5:00 மணி முதல் 6:00 மணிக்குள், கொடியேற்றம் நடக்கிறது. அன்று மாலையில், மங்களகிரி விமான புறப்பாடு நடக்கிறது.
இரண்டாம் நாள் காலை 7:00 மணிக்கு சூரிய பிரபை, இரவு 7:00 மணிக்கு சந்திர பிரபை புறப்பாடும், மூன்றாம் நாள் இரவு 7:00 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடும், நான்காம் நாள் இரவு 7:00 மணிக்கு நாக வாகன புறப்பாடும் நடக்கிறது.வரும், 7ம் தேதி, ஐந்தாம் நாள் விழாவில், இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான, 9ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:31 மணி முதல் 8:15 மணிக்குள், பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அன்று இரவு, 7:00 மணிக்கு ஒய்யாரி உற்சவம் நடக்கிறது.வைகாசி விசாகமான, 12ம் தேதி நடக்கும் பத்தாம் நாள் விழாவில், காலை 10:00 மணிக்கு, சண்முகர், வள்ளி, தேவசேனா தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. அன்று வடபழநி ஆண்டவருக்கு கலாசபிஷேகம் நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவமும், மயில்வாகன புறப்பாடும் நடக்கிறது. அன்று இரவு, கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா பூர்த்தியாகிறது.வரும், 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை, விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணைக் கமிஷனர் முல்லை ஆகியோர் செய்துள்ளனர்.