பதிவு செய்த நாள்
01
ஜூன்
2022
09:06
போரூர் : போரூர் தர்மராஜா கோவிலில், திரவுபதி அம்மன் திருவிழாவையொட்டி இன்று அர்ஜுனன் - திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. 5ம் தேதி தீ மிதி திருவிழா நடைபெறஉள்ளது.
சென்னை போரூர் சேக்மாணியத்தில், தர்மராஜா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், திரவுபதி அம்மன் 9 ம் ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த மாதம் 26 ம் தேதி துவங்கி, வரும் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதில், இன்று காலை, 9:00 மணிக்கு அர்ஜுனன் - திரவுபதி அம்மன் திருக்கல்யாணம்நடைபெற்றது. மதியம் 2:30 மணிக்கு, பாஞ்சாலி துகிலும்; பரந்தாமன் அருளும் பாரத சொற்பொழிவு, இரவு 9:00 மணிக்கு அர்ஜுனன் - திரவுபதி அம்மன் திருமணக் கோலத்தில் திருவீதி உலா, இரவு 10:00 மணிக்கு, பகடை துகில் தெருக்கூத்து நாடகம் நடைபெற உள்ளது.
இதையடுத்து, நாளை மதியம் 2:00 மணிக்கு, பாண்டவருக்காக பகவான் கிருஷ்ணன் துாது சொற்பொழிவு, மாலை 6:00 மணிக்கு ராஜ ராஜேஸ்வரி அம்மன் அலங்காரம், இரவு 10:00 மணிக்கு கிருஷ்ணன் துாது தெருக்கூத்து நாடகம் நடைபெற உள்ளது.மேலும், 5ம் தேதி காலை 7:00 மணிக்கு படுகளம் பாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நாடகம், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா, இரவு 9:00 மணிக்கு மஹிஷாசூரமர்த்தினி, 32 திருக்கரங்களுடன் அம்மன் அலங்காரம் திருவீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக, 6ம் தேதி காலை 9:00 மணிக்கு பொறை நிறை மன்னன் திருமுடி புனைதல், தர்மர் அலங்காரம் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறும். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.