பதிவு செய்த நாள்
01
ஜூன்
2022
12:06
ஆர்.கே.பேட்டை: ராகவநாயுடுகுப்பம் கிராமத்தில் உள்ள ஆறு கோவில்களில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கிராமத்தினர் பக்தி பரவசத்தில் திளைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த, ராகவநாயுடுகுப்பம் கிராமத்தில், 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
யாகசாலை பூஜை: விவசாயம் இவர்களின் பிரதான தொழில். விவசாயத்திற்கு உறுதுணையாக, கிராமத்தின் மேற்கில் பொது குளமும், தெற்கில் ஏரியும் நீர்வளத்துடன் விளங்குகின்றன. குளக்கரையில், கமல விநாயகர், அனுமன், சப்தகன்னியர், கங்கையம்மன், பொன்னியம்மன் கோவில்களும், கிராமத்தின் நடுவே சீதாராமர் கோவிலும் அமைந்துள்ளன. இந்த ஆறு கோவில்களையும் புனரமைக்கும் பணி, சில மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கின.
சுவாமி வீதியுலா : இன்று, காலை 6:15 மணிக்கு, பொன்னியம்மன் கோவிலில் துவங்கி, பகல் 11:45 மணிக்கு சீதாராமர் கோவில் என வரிசையாக ஆறு கோவில்களுக்கும் அடுத்தடுத்து கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.மாலை 7:00 மணிக்கு, சுவாமி வீதியுலா நடைபெறும்.கும்பாபிஷேகத்தை ஒட்டி, கிராமம் முழுதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்துள்ளனர்.