பதிவு செய்த நாள்
01
ஜூன்
2022
02:06
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் பக்தர்களுக்கு நேறறும், சிறப்பு தரிசனத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலில், பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை நாளில், காலை 6:00 மணி முதல், காலை 9:00 மணி வரை உள்ளூர் பக்தர்கள், 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழியில் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
சிறப்பு தரிசன டிக்கெட் : இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கோவில் துணை ஆணையராக புதிதாக பொறுப்பேற்ற, விஜயா, தரிசனத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்தார்.மேலும், உள்ளூர் பக்தர்களும், சிறப்பு தரிசன டிக்கெட் வழியாக இலவசமாக செல்லக்கூடாது, பொது வழியில் தான் செல்ல வேண்டும் என, உத்தரவிட்டு அமலுக்கு கொண்டு வந்தார். இதனால், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை உள்ளூர் பக்தர்கள், சிறப்பு வழியில் அனுமதிக்கப் படாததால், ஊழியர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலில் முடிந்தது.இதில், கோவில் ஊழியர் ஒருவர், பக்தர் ஒருவர், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இரு தரப்பினரும் போலீசில் புகார் கொடுத்ததால், வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பாதுகாப்பு பணி: இந்நிலையில், நேற்று, செவ்வாய்க்கிழமை என்பதால், உள்ளூர் பக்தர்கள் சிறப்பு வழியில் அனுமதிக்க வேண்டும் என தகராறு செய்வர், எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கோவில் நிர்வாகம், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். அதாவது, 150 மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர், பொதுவழி மற்றும் மூலவர் தரிசிக்கும் இடம் என, முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அறிவிப்பு பலகை வைப்பு: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர் அருகில், கோவில் நிர்வாகம் சார்பில், இந்த வழியாக டிக்கெட் பெற்றவர்கள் மட்டும் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். இலவசமாக செல்வதற்கு அனுமதி கிடையாது. இதை மீறி, கோவில் ஊழியர்களிடம் வாக்குவாதம், தகராறில் ஈடுபடும் பக்தர்கள் மீது, போலீசில் புகார் கொடுக்கப்படும். மேலும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.