திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2022 11:06
நாமக்கல் : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக தேர் திருவிழா 4ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நாளை ( ஜூன் 07) செவ்வாய்க்கிழமை ஆதிகேசவப் பெருமாள் கொடியேற்றம், சுவாமி திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.
உலகிலேயே ஆண்பாதி, பெண்பாதியாக அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிப்பது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் மட்டுமே. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்செங்கோட்டில் ஆண்டிற்கு ஒருமுறை மிகச்சிறப்பாக வைகாசி விசாக தேர் திருவிழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதம் கொண்டாடப்படும் தேர் திருவிழாவானது திருச்செங்கோடு மாநகரம் முழுவதும் 14 நாட்களுக்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவபெருமாள் சுவாமிகள் மலைமேல் இருந்து கீழே கொண்டுவரப்படுவர். பிறகு திருத்தேர் மீது அமர்ந்து திருக்கொடிமாடசெங்குன்றூரின் (திருச்செங்கோட்டின்) நான்குமாட வீதி வழியாக தேர் இழுக்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும். கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் வைகாசி விசாக தேர் திருவிழா இந்த ஆண்டு சுபகிருது வருடம் வைகாசி மாதம் 21ஆம் தேதி முதல் ஆனி மாதம் 3ஆம் தேதி வரை (04.06.2022 சனிக்கிழமை முதல் 17.06.2022 வெள்ளிக்கிழமை வரை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
விழாவில் .. நாளை ( ஜூன் 07) செவ்வாய்க்கிழமை ஆதிகேசவப் பெருமாள் கொடியேற்றம், சுவாமி திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளல். ஜூன் 09 (வைகாசி 26) - வியாழக்கிழமை சுவாமி புறப்படுதல், திருமலை வலம் வர எழுந்தருளல். ஜூன் 12 (வைகாசி 29) - ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு மங்கைபங்கன் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளல், மஹா கணபதி திருத்தேர், செங்கோட்டுவேலவர் திருத்தேர் வடம்பிடித்தல், அருள்மிகு பெருமாள் திருக்கல்யாணம்.
ஜூன் 13 (வைகாசி 30) - திங்கட்கிழமை ஆதிகேசவப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல், அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் நிலை பெயர்த்தல். ஜூன் 14 (வைகாசி 31) - செவ்வாய்க்கிழமை அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம்பிடித்தல் ஜூன் 15 (ஆனி 01) - புதன்கிழமை அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம்பிடித்தல், திருத்தேர்கள் நிலை சேர்ந்த பின்பு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தேரோட்டம். ஜூன் 17 (ஆனி 03) - வெள்ளிக்கிழமை சுவாமி அதிகாலை திருமலைக்கு எழுந்தருளி திருவிழா நிறைவு பெறும்.