பதிவு செய்த நாள்
04
ஆக
2012
10:08
லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுமகாதானபுரம், மகாலட்சுமி கோவிலில் நேற்று நடந்த விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுமகாதானபுரத்தில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின்போது பக்தர்கள், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது. ஆடி மாதம் பிறந்த நாளான, கடந்த 16 ம் தேதி பக்தர்கள் காவிரியாற்றில் குளித்து விட்டு, மகாலட்சுமி கோவிலுக்கு சென்று, காப்பு மற்றும் மாலை அணிந்து கொண்டனர். தொடர்ந்து அன்று முதல் பக்தர்கள் விரதம் இருந்தனர். டோக்கன் : நேற்று காலை, 6 மணி முதல் மகாலட்சுமி கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று காலை, 8 மணி முதல் பக்தர்களுக்கு "டோக்கன் அளிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் வரிசையில் உட்கார வைக்கப்பட்டனர். காலை, 9.30 மணிக்கு, 14வது தலைமுறை கோவில் பரம்பரை பூசாரி பெரியசாமி, ஆணி காலணி அணிந்து பூஜை நடத்தினார். பின், கோவில் கொடிமரத்தில் விளக்கு ஏற்றப்பட்டது. கொடிமரத்தை கருடன்
வட்டமிட்டதை தொடர்ந்து, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் விழா துவங்கியது. சப்த கன்னிமார்களை குறிக்கும் வகையில், கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த, 24 மனை தெலுங்கு செட்டியார் ஏழு பேர், குரும்பக் கவுண்டர் ஏழு பேர் ஆகியோர் தலையில் முதலில் தேங்காய் உடைக்கப்பட்டது. பிறகு கோவில் வளாகத்தில் வரிசையாக அமர்த்தப்பட்டிருந்த, 20
வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் தலையில் பூசாரி பெரியசாமி தேங்காய் உடைத்தார். தேங்காய் உடைக்கும் திருவிழாவையொட்டி, குளித்தலை டி.எஸ்.பி., இளங்கோ தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.