பதிவு செய்த நாள்
04
ஆக
2012
12:08
உடன்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் ஆடிக் கொடை விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு நடைபெறும் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்றிது. இச்சிறப்பு மிக்க ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிக் கொடைவிழா வெகுவிமர்ச்சியாக நடைபெறும். திருவிழாவில் முதல் நாள் இரவு மாக்காப்பு தீபாராதனையும், இரவு வில்லிசையும் நடந்தது. இரண்டாவது நாள் காலை, மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. பகலில் கும்பம் திருவீதி உலாவும், பகலில் வில்லிசையும், அன்னதானமும் நடந்தது. காலை, இரவு சிறப்பு மகுடமும், கரகாட்டமும், சிறப்பு நையாண்டி மேளமும் நடந்தது. காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மூன்றாவது நாள் காலை சிறப்பு பூஜையும், அன்னதானம், காலையில் சிறப்பு மகுடமும், கும்பம் திருவீதி உலாவும், வில்லிசையும், மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. சிறப்பு மிக்க தசரா திருவிழா வரும் அக்.15ம் தேதி கொடியேற்றமும், வரும் அக்.24ம் தேதி மகிஷாசுரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வீரராஜன், நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.