காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2022 10:06
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் வருகின்ற 23ம்தேதி கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு பிரத்தியேகமாக 33 யாக குண்டங்களும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு பத்து குண்டங்களிலும் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரையில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு கோயிலில் வருகின்ற 23-ஆம் தேதி ஸ்வர்ணபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறவுள்ளது. இதனைமுன்னிட்டு கடந்த 16-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கி ஸ்ரீகாமாட்சி அம்பாளுக்கு பிரசன்னா அபிஷேகம், யாழி வாகனத்தில் தீர்த்த சங்க்ரஹணம் உள்ளிட்ட பல்வேறு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.. தொடர்ந்து ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு பிரத்தியேகமாக 33 யாக குண்டங்களும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கு 10 யாக குண்டங்களில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க முதல்கால யாகசாலை பூஜைகள் எஜமான சங்கல்பத்துடன் துவங்கியது. அங்குரார்பணம், காப்பு கட்டும் விழாவான ஆச்சார்ய ரக்க்ஷாபந்தனம், கும்பாலங்காரம், காலகர்ஷணம் நடைபெற்றது. தொடர்ந்து காமாட்சி அம்மனை கலசத்தில் ஆவாகனம் செய்து யாகசாலையில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சியான மூலமந்திர ஜபம் செய்து கடஸ்தாபனம் செய்யப்பட்டது. திருமுறை பாராயணம், வேத பாராயணம், வேத மந்திரங்கள் முழங்க முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்று பூரணாகுதி மகாதீபாரதனை நடைபெற்றது. மயிலாடுதுறை வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் 124 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளை செய்தனர். 23ம் தேதி காலை 10மணிலிருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேக பெருவிழா நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு பக்தர்களை பரவசப்படுத்தும் கண்கவர் பரதநாடிட்டிய நிகழ்வுகளும் அரங்கேறியது.