பதிவு செய்த நாள்
20
ஜூன்
2022
04:06
தர்மபுரி: ‘‘இதுவரை மீட்கப்பட்ட கடவுள் விக்ரகங்களை, மியூசியங்களில் வைக்காமல் கோவில்களின் வைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என, முன்னாள் போலீஸ் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறினார். தர்மபுரியில் நேற்று, உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:உலகிலுள்ள அனைத்து சிவனடியார்களும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டும்.
கோவில்கள் மற்றும் அதன் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே சிவனடியார் கூட்டத்தின் நோக்கம். கோவிலிலுள்ள, 3 லட்சத்து, 50 ஆயிரம் கடவுள் விக்ரகங்களை, ஆட்சியாளர் மற்றும் அதிகாரிகள் கையில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை. கோவில்களை பொறுத்தவரையில், 700க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்துள்ளன. அறநிலையத்துறையே இந்த குற்றங்கள் நடந்துள்ளன என, ‘அபிடவிட்’ தாக்கல் செய்துள்ளனர்.கடந்த, 1960ல் இந்திய அரசு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி சிவன் கோவிலில் எடுக்கப்பட்ட உமா பரமேஸ்வரி விக்ரகத்தை இங்கிலாந்து ராணிக்கு பரிசாக வழங்கியது கண்டனத்துக்குரியது. இதை மீட்டுவர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேர, சோழ, பாண்டியர்களால் படைக்கப்பட்ட கடவுள் விக்ரகங்களை, வரும் காலங்களில் பரிசாக கொடுக்க கூடாது. சமீபத்தில் நடராஜர் தெய்வத்தை அவமானப்படுத்தியவர்கள் மீது, 20 மாவட்டங்களில் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்.தமிழக கோவில்களிலுள்ள, 26 ஆயிரம் அர்ச்சர்கள் இன்னும், 10 ஆண்டுகளில் அர்ச்சகர் பணியில் இருக்க மாட்டார்கள். அவர்களது குழந்தைகளும் அர்ச்சகர் பணிக்கு வரவிரும்பவில்லை. அர்ச்சகர், மங்கள வாத்தியம் வாசிப்பவர்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. ஆனால், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கோவில்கள் பெயரில், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், முந்திரி, பாதம் உள்ளிட்டவை சாப்பிட்டு, சொகுசு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதுவரை மீட்கப்பட்ட கடவுள் விக்ரகங்களை, மியூசியங்களில் வைக்காமல் கோவில்களின் வைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.