கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் தோஷ நிவர்த்தி வேண்டி மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி பாரதி பள்ளி பின்புறம் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உலக அமைதி, நாட்டு நலன், தோஷ நிவர்த்தி வேண்டி ஆடித்திருவிழாவான நேற்று முன்தினம் மாலை மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது. அதையொட்டி பத்ரகாளியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த யாகத்தில் மிளகாய் நெடி சிறிதும் இன்றி பக்தர்கள் பத்ரகாளியம்மனை வேண்டியபடி வழிபட்டனர். பிரதி அமாவாசை தோறும் நடக்கும் மிளகாய் யாகத்தின் மகிமை குறித்தும், ஞாயிறு தோறும் நடக்கும் சிறப்பு வழிபாடுகள் குறித்தும் கோவில் நிர்வாகி குமார் கூறினார். யாகத்திற்கு பிறகு 300க்கு மேற்பட்ட பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.