பதிவு செய்த நாள்
22
ஜூன்
2022
08:06
அதியமான்கோட்டை: ஆனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமியன்று, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். ஆனி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு தட்சணகாசி காலபைரவருக்கு, அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜை நடந்தது. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது. இதேபோல், தர்மபுரி நகர் கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள பைரவருக்கும் நேற்று, சிறப்பு பூஜை நடந்தது.