காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தெப்பத்தில் நீராழி மண்டபம் கட்ட ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2022 05:06
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தெப்பத்தில் மையத்தில் உள்ள நீராழி மண்டபத்தை புதிதாக கட்டுவதற்கு நேற்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தென் காளஹஸ்தி என அழைக்கப்படுகிறது. கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். இங்கு ராகு கேது தம்பதி சகிதமாக தனித்தனியே எழுந்தருளியுள்ளனர். இந்த கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்த கோயில் தெப்பத்தை சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத் துறை ௹ 22 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. நிதி ஒதுக்கியும் கடந்த பல மாதங்களாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தெப்பத்தின் மையப்பகுதியில் உள்ள நீராழி மண்டபம் சிதைந்து கிடக்கிறது. நீராழி மண்டபத்தை இடித்துவிட்டு புதிய மண்டபம் கட்ட பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. செயல் அலுவலர் இளம் செழியன், தொல்லியல் துறை அலுவலர் நாராயணன் ஆகியோர் நேற்று காலை தெப்பத்தின் மையப்பகுதியில் உள்ள நீராழி மண்டபத்தை ஆய்வு செய்தனர். மண்டபத்தின் கீழ் கட்டுமானம் எப்படி உள்ளது, மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நீராழி மண்டடம் கட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு ஹிந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று பணிகள் துவங்கும் என்று செயல் அலுவலர் இளம் செழியன் கூறினார்.