பதிவு செய்த நாள்
23
ஜூன்
2022
11:06
மயிலாடுதுறை: கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை கிராமத்தில் பிரசித்திபெற்ற 500 ஆண்டுகள் பழமையான காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முழுவதும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் இன்று 23ம் தேதி நடந்ததது, கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 17ம் தேதி அனுக்சை, விக்னேஷ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. 19ம்தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை 8ம் கால யாகசாலை பூஜை தொடங்கி நடந்தது திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் 233வது குருமகா சன்னிதானம் திருச்சிற்றம்பல தேசிகர் ஞானப்பிரகாசர் பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் 28ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குருமகாசந்நிதானம் அவர்கள் முன்னிலையில் 8ம் கால யாகசாலை பூர்ணாஹுதி, மகா தீபாராதனையாகி யாகசாலையில் கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து 10:45 அளவிலான மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகளும் சிவபுரம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். தொடர்ந்து அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் தொழிலதிபர்கள் சென்னை டெக்கான்மூர்த்தி, மயிலாடுதுறை சூரிவிஜயகுமார், தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஜவகர் மற்றும் உபயதாரர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் மாலை அம்பாள் வீதியுலா காட்சி நடைபெற உள்ளது.