பதிவு செய்த நாள்
08
ஆக
2012
10:08
ஓசூர்: ஓசூர் பிரம்மமலை கோவிலில், பிரம்மா சிலைகள் பிரதிஷ்டை விழா நடந்தது. ஓசூரில் விஷ்ணுமலை, பிரம்மமலை மற்றும் சிவன் மலை ஒரே நேர் கோட்டில் உள்ளது. இவற்றில் சிவன் மலை, விஷ்ணு மலையில் கோவில்கள் அமைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். பிரம்ம மலையில் மட்டும் கோவில் எதுவும் இல்லாமல் வழிபாடு இல்லாமல் இருந்தது. இதையடுத்து, ஓசூர் ஜே.சி.ஐ., பச்சையம்மன் சில்க்ஸ் தன்னார்வ அமைப்பு மூலம் இந்த பிரம்ம மலையில் பிரம்மா கோவில் அமைக்கப்பட்டது. இக்கோவிலில், பிரம்மா சிலைகள் ஆகம விதிகள்படி சிறப்பு பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. பிரதிஷ்டை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ., மண்டல துணைத்தலைவர் சிவகுருநாதன், மண்டல பயிற்சியாளர் நாகமலிங்கம், கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த பிரம்ம மலை பிரம்மாவின் புனித மலையாக கருதப்படுகிறது. இந்த மலைக்கு வந்து சென்றால் குணமடையாத நோய்கள் கூட குணமடைவதாகவும், குடும்ப பிரச்சனைகள் தீருவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.