பதிவு செய்த நாள்
24
ஜூன்
2022
12:06
விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் அகஸ்தியர் அருவி கல்யாண தீர்த்தம் லோகநாயகி சமேத கோடிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் சிவநாமங்கள் முழக்கத்துடன் வெகுவிமர்சையாக நடந்தது.
கல்யாண தீர்த்தத்தில் லோகநாயகி சமேத கோடிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் லோபமுத்திரா, அகஸ்தியர் சுவாமிகள் பிரதிஷ்டையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை சுமார் 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. மாலை 4 மணிக்கு விசேஷ சந்தி, அங்கு ரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், முதல் காலயாக பூஜை, திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை நாளான நேற்று காலை7 மணிக்கு 2ம் காலயாக பூஜை, பிம்பசுத்தி, ஸ்பரிஷாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனையும் காலை சுமார் 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கடம்புறப்பாடு, விமானம் மற்றும் மூலஸ்தனம் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் சிவநாமங்கள் முழக்கத்துடன் நடந்தது. இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும்தீபாராதனை நடந்தது. விழாவில் அறநிலையத்துறை இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, துணைஆணையர் ஜான்சிராணி, உதவி ஆணையர் கவிதா, பாபநாசம் கோயில் நிர்வாக அதிகாரி போத்தி செல்வி, சென்னை டாக்டர் ரவிக்குமார், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சேர்மன் செல்வசுரேஷ் பெருமாள், அகஸ்தியர் கோயில் கார்த்திகை கமிட்டி தலைவர் சுப்பையா மற்றும் மாரியப்பன், ஸ்தபதி உமையொருபாகம் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.