பதிவு செய்த நாள்
24
ஜூன்
2022
04:06
ஸ்ரீபெரும்புதுார்: செல்வவிநாயகர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, காந்துார் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், காந்துார் ஊராட்சி உள்ளது. 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். காந்துாரில் பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலின் பின்புறம் உள்ள குளம், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இன்றி உள்ளது. குளம் முழுதும், ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்துள்ளன. குளத்தில் இருந்த மீன்கள் அழிந்துவிட்டன. குளத்து நீர் முழுதும் மாசடைந்து விட்டதால், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் கூட, இந்த குளத்தில் நீரை குடிப்பதில்லை. ஆகாயத் தாமரை செடிகளில், கொசுக்கள் முட்டையிட்டு, இனப்பெருக்கம் ஆகின்றன. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் கொசுக்கடியால் அவதிக்குள்ளாகின்றனர். இந்த குளத்தில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்றி, குளத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என, காந்துார் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.