பதிவு செய்த நாள்
24
ஜூன்
2022
04:06
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 2022 - -2023ம் ஆண்டிற்கான ரூ.50 கோடிக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பணிகளின் விபரங்கள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.இதில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்து கூறியதாவது:கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் ரூ.6 கோடியில் அமைக்கவும், கோயில் வளாகத்தில் 330 கடைகள் கட்டும் பணிகள் ரூ.20 கோடியிலும், அன்னதானக் கூடம் ரூ.2.50 கோடியிலும், பல்நோக்கு ஓய்வுக் கூடம் ரூ.4 கோடியிலும் கட்டப்படுவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.
கோயில் எல்லைப் பகுதியில் சுற்றுச்சுவர் ரூ.3 கோடியில் அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் மேற்கு, தெற்கு வெளிப்பிரகாரத்திற்கு வெளியே கருங்கல் தளம் ரூ.1.50 கோடியிலும், கோயில் வளாகத்தில் சுற்றுச் சாலைகள், வாகனங்கள் நிறுத்துமிடம் ரூ.6.50 கோடியிலும், அம்மை நோய் பாதித்தவர்கள் விரதம் மேற்கொள்ள வயன மண்டபம் ரூ.50 லட்சத்திலும், கலையரங்கம் ரூ.50 லட்சத்திலும், பெண்களுக்கு குளியல் அறை, கழிப்பறை ரூ.2 கோடியிலும் கட்டப்படுவதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.கோயிலின் வடமேற்குப் பகுதியில் ரூ.50 லட்சத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத்தொட்டி, சுற்றுச்சூழல் பூங்கா ரூ.3கோடியில் அமைக்க அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என ஆக மொத்தம் ரூ.50 கோடி மதிப்பில் 2022--23 ஆம் ஆண்டிற்கான சட்டசபை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது, என்றார்.இதன்படி பக்தர்கள், பொதுமக்கள் நலனை முன்னிட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கோயில் வரைபடத்தை ஆய்வு செய்து அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஆலோசனைகளை வழங்கினார்.இதில் இருக்கன்குடி அறங்காவலர் ராமமூர்த்தி, உதவி ஆணையர், செயல் அலுவலர் கருணாகரன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.