உத்திரமேரூர்: சிறுதாமூர் ஆஞ்சனேயர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சிறுதாமூர் கிராமம். இக்கிராமத்தில், சாலையோர அரச மரத்தடி ஒன்றின் கீழ், கடந்த சில மாதங்களுக்கு முன், குரங்கு ஒன்று இறந்து கிடந்துள்ளது. அக்குரங்கை அப்பகுதி வாசிகள் அதே இடத்தில் அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. குரங்கை அடக்கம் செய்த இடத்தில், ஆஞ்சனேயர் சிலை வைத்து, வழிபட அப்பகுதிவாசிகள் தீர்மானித்தனர். அதன்படி, சிறுதாமூர் அரச மரத்தடியில் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சிலை அமைக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிேஷகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. யாகசாலையில் இருந்து நேற்று காலை 9:00 மணிக்கு கலசம் புறப்பாடு துவங்கி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆஞ்சனேயர் மற்றும் ராம பக்தர்கள் பங்கேற்று, தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.