கீரனூர்: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அழகிய சொக்கநாத பெருமாள் திருக்கோயிலில் பாலாலயம் நேற்று நடைபெற்றது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் 38 கோவில்கள் உள்ளன. பல நூற்றாண்டுகள் பழமையான கோயிலாக கீரனூர் அழகிய சொக்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிய சொக்கநாதப் பெருமாள் மூலவர் உள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில் , நேற்று காலை இக்கோயில் விமானத்திற்கான பாலாலய பூஜை நடைபெற்றது. அதில் அனுஞ்கை, வாஸ்து பூஜை, ஸ்தபதி பூஜை, கணபதி பூஜை, யாக பூஜைகள் நடைபெற்றன. விமானத்தில் ஈசான மூலையில் ஸ்தபதிகள்பணிகளை துவங்கும் உதவி செய்தனர். இதில் அத்தி மரத்தில் பாலாலயம் நடைபெற்றது. அதன் பின் சுவாமிக்கு கண் திறந்து கண்ணாடி வழியாக பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் பிரகாஷ், செயற்பொறியாளர் சாந்தாராம், கண்காணிப்பாளர் அழகர்சாமி உள்ளிட்ட அதிகாரிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் நடராஜன் அறிவுறுத்தல் படி செய்தனர்.