பதிவு செய்த நாள்
28
ஜூன்
2022
11:06
பல்லடம்: பல்லடம் அருகே, நூறாறாண்டுகள் பழமையான கால்நடை தண்ணீர் தொட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வரலாற்று மையம் குழுவினர் பழமையான வரலாற்று சின்னங்கள், கட்டடங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து அவற்றின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். அவ்வாறு, பல்லடம் வட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்டு ஏராளமான தகவல்களை இதுவரை சேகரித்துள்ளனர். நேற்று முன்தினம், பல்லடம் அடுத்த, கேத்தனூர் ஊராட்சி, மானாசிபாளையம் கிராமத்தில் ஆய்வு செய்ததில், பழமையான கால்நடை கல் தொட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து வரலாற்று மைய ஆர்வலர் பாண்டியன் கூறுகையில், விவசாய தொழில் நிறைந்த பல்லடம் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில், இதுபோன்ற பழமையான கால்நடை தொட்டிகளை காணலாம். நம் முன்னோர்கள் கால்நடைகளின் தாகத்தை போக்கும் வகையில், இதுபோன்ற கல் தொட்டிகளை பல்வேறு இடங்களில் அமைத்திருந்தனர். அவ்வாறு, கேத்தனூர் மானாசிபாளையத்தில், தண்ணீர் தொட்டி ஒன்று ரோட்டோரத்தில் கேட்பாரற்று மண் மூடி கிடந்தது. அதை சுத்தம் செய்து அதிலுள்ள எழுத்துக்களை படிக்க முயன்றோம். ஆனால், எழுத்துக்கள் மிகவும் சேதமடைந்துள்ளதால் படிக்க இயலவில்லை. ஏரத்தாழ, 250 ஆண்டுகளுக்கு முந்தையதாக இது இருக்கலாம். அப்பகுதியை சேர்ந்த முன்னோர் சிலர் தொட்டியை தானமாக வழங்கி உள்ளனர் என்றார்.