2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2022 11:06
திருப்பரங்குன்றம்: பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் திருப்பரங்குன்றம் மலையில் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் பாறைகளின் இடுக்குகளில் இருப்பதை கண்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் செல்லப்பாண்டியன், முனீஸ்வரன், அரசு அருங்காட்சியக காப்பாளர் மருது பாண்டியன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு கற்படுக்கைகள் ஆய்வு செய்தனர். அருண் சந்திரன் கூறியதாவது: மதுரையில் கி.மு., 3லிலிருந்து கி.பி. 3ம் நூற்றாண்டு வரை சமணம் செல்வாக்குப் பெற்று இருந்துள்ளது. மதுரையைச் சுற்றிலுமுள்ள திருப்பரங்குன்றம், அழகர் மலை, கீழக்குயில்குடி, மாங்குளம் உள்ளிட்ட எண்பெருங்குன்றங்களில் சமணம் செழித்து இருந்ததற்கான சான்றுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன. மேலும் திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் புதிய கற்படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. மற்ற படுக்கைகளை போல் இவையும் க.மு., 2 மற்றும் 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஏற்கனவே உள்ள கற்படுக்கைகளில் கி.மு, 2 மற்றும் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள கற்படுக்கைகளில் கல்வெட்டுக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. சைவம் போன்ற சமணமும் உருவ வழிபாட்டுக்கு திரும்பிய காலத்தினை உறுதிப்படுத்தும் விதமாக திருப்பரங்குன்றம் மலையிலில் உள்ள காசி விசுவநாதர் கோயில் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளிட்ட பல்வேறு சமணம் சார்ந்த அடையாளங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளது. தொடர்ந்து இந்த மலையில் புதிய கற்படுக்கைகள் கிடைத்து வருவது வரலாற்று ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தான் என்ற போதிலும் இப்பகுதியை தொடர்ந்து தொல்லியல் ஆய்வுக்குட்படுத்தி மேலும் ஆய்வு செய்தால் தமிழ் கல்வெட்டுகளுஞன்கூடிய தொல்லியல் சான்றுகள் கிடைப்பதுடன் சிறப்புமிக்க திருப்பரங்குன்றம் மலை தயங்கி நிற்கும் முழுமையான வரலாற்று சான்றுகளையும் நாம் அறிய முடியும் என்றார்.