பதிவு செய்த நாள்
29
ஜூன்
2022
11:06
துாத்துக்குடி: முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்மன் கோயில் கொடைவிழா கோலாகலமாக நடந்தது.
முக்காணி யாதவர் சமுதாயம் சார்பில் ஆதிபரமேஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா நிகழ்ச்சி கடந்த 26ம்தேதி துவங்கியது. 27ம்தேதி காலை பந்தல் திறப்பு விழா நடந்தது. தொடர்ந்து உறுமி மேளம், நையாண்டி மேளம், சிங்கார மேளம் கச்சேரிகள் நடந்தது.
இரவு மகுட இசையும், வில்லிசையும் நடந்தது. நேற்று காலை கணபதி ஹோமம், தாமிரபரணி நதியிலிருந்து அம்பாளுக்கு பால்குடம் எடுத்தும் வரும் நிகழ்ச்சியும், மதியம்11 மணிக்கு அபிஷேகமும் உச்சி கால பூஜையும், மாலை தாமிரபரணியிலிருந்து திருமஞ்சன குடம் எடுத்து வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு வில்லிசையும், அதைத்தொடர்ந்து கரக ஆட்டம், குறவன்குறத்தி ஆட்டம் நடந்தது. இரவு 12 மணிக்கு அம்பாளுக்கு அலங்கார தீபாராதனையும் இரவு 1 மணிக்கு வாணவேடிக்கையுடன் அம்பாள் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் இன்று (29ம்தேதி) காலை10 மணிக்கு அம்பாள் மஞ்சள் நீராடி மேளம் மற்றும் மகுடத்துடன் வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு மகுட இசையும், 30ம்தேதி இரவு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை யாதவர் சமுதாய கொடைவிழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.