மேல்மலையனுார் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் : பாதுகாப்பின்றி பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2022 05:06
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதிப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரமம் செய்தனர். வழக்கமாக இரவு 12 மணிக்கு துவங்க வேண்டிய உஞ்சல் உற்சவத்தை பக்தர்கள் நெரிசல் அதிகமாக இருந்ததால் இரவு 11 மணிக்கே துவக்கினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டனர். பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் மற்றும் அறங்காவலர்கள் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதே நாளில் வேலூரில் நடத்த முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி பாதுகாப்பிற்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பெரும்பாலான போலீசாரும், அதிகாரிகளும் சென்று விட்டனர். இதனால் விழுப்புரம் டி.எஸ்.பி., பார்த்தீபன் தலைமையில். மிக குறைந்த எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஆனால் வழக்கத்தை விட இரு மடங்கு பக்தர்கள் வந்திருந்தகர். பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்தை சரி செய்யும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் போலீசார் இல்லை. கோவிலுக்கு வரும் வழியில் மயான சாலை பிரியும் இடத்தில் இரவு 12 மணி முதல் 12.30 மணி வரை கடும் நெரில் ஏற்பட்டது. இதில் சிக்கிய கைக்குழந்தையுடன் வந்தவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் பயத்தில் அலறினர். கூட்டத்தை ஒழுங்குபடுத்த கடைசி வரையில் போலீசார் வரவில்லை. இதே போல் கோவில் மேற்கு வாசல் பகுதியிலும் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.