பதிவு செய்த நாள்
29
ஜூன்
2022
06:06
சென்னை:அர்ச்சகர்களை இஷ்டத்திற்கு நியமிக்க முடியாது; ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில், அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில், அர்ச்சகர்கள் நியமன நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.இம்மனுக்கள், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தன.மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் வள்ளியப்பன் உள்ளிட்டோரும், அறநிலையத்துறை சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் அருண் நடராஜனும் ஆஜராகினர்.
இருதரப்பு வாதங்களுக்கு பின், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, முதல் பெஞ்ச் முடித்து வைத்தது.உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக, அர்ச்சகர் நியமனங்கள் இருந்தால், அதை எதிர்த்து, பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள், தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம் எனவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விதிகள் வகுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கின் விசாரணையை, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து, அர்ச்சகர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வள்ளியப்பன் கூறியதாவது:சைவ கோவில்களில் 28, வைணவ கோவில்களில் இரண்டு என ஆகம விதிகள் உள்ளன. இதன்படி தான் கோவில் அமைப்பு மற்றும் கோவில் வழிபாடு ஆகியவை உள்ளன.
கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில், 1972, 2016ல் வழக்குகள் தொடரப்பட்டன. அதாவது, 1972ம் ஆண்டு சேஷம்மாள் வழக்கு மற்றும் 2016ம் ஆண்டு ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்கில், ஆகமம் படிதான் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என, உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவுபடி தான், அர்ச்சகர்கள் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம்.சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படியே, அர்ச்சகர்கள் நியமனங்களை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.அறங்காவலர்கள் தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்; அறங்காவலர் இல்லாத கோவிலில், தக்கார் வாயிலாக நியமனம் செய்யலாம்; இந்த நியமனங்களும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்றி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே, அர்ச்சகர் நியமனம் நடக்கும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில், தக்கார் வாயிலாக நியமனம் மேற்கொள்ளலாம் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்ச்சகர் நியமனம் தொடர்பாக வந்த விளம்பரங்களை எதிர்த்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது என்றார்.